தமிழில் ஒரு பழமொழி உண்டு – “எழுதினவன் ஏட்டை கெடுத்தான்”
இது எதற்கு பொருந்துகிறதோ இல்லையோ லக்ஷ்மீ அஷ்டோத்தர சத நாமாவளிக்கு பொருந்துகிறது. முதல் நபர் செய்த தவறை நம்மில் பலரும் தொடர்ந்து கொண்டே இருக்கிறோம்.
இந்த கட்டுரையைப் படித்துவிட்டு முதல் வேலையாக உங்கள் புத்தகங்களில் திருத்தம் செய்து கொள்ளுங்கள்.
லக்ஷ்மி அஷ்டோத்தரத்துக்கு செல்லும் முன் ஒரு அடிப்படை விஷயத்தை விளக்குகிறேன்.
எந்த ஒரு அஷ்டோத்தரமோ ஸஹஸ்ரநாமமோ முதலில் ஸ்தோத்ர வடிவில் ச்லோகங்களாகவே இருக்கும் – பின்னர் இதனை நாமாக்களாக அர்ச்சனைக்காக பிரிப்பது வழக்கம்.
உதாரணமாக
விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம்
“விச்வம் விஷ்ணுர் வஷட்காரோ….” என்று தான் துவங்குகிறது. இதனைப் பிரித்து,
ஓம் விச்வஸ்மை நம:
ஓம் விஷ்ணவே நம:
ஓம் வஷட்காராய நம: என்று அர்ச்சனை செய்கிறோம்
அதே போல லக்ஷ்மீ அஷ்டோத்தர சத நாமாவளி
ப்ரக்ருதீம் விக்ருதீம் வித்யாம் ஸர்வபூதஹிதப்ரதாம்… என்று துவங்குகிறது.
இதனை
ஓம் ப்ரக்ருத்யை நம:
ஓம் விக்ருத்யை நம:
ஓம் ஸர்வ பூதஹித ப்ரதாயை நம:
என்று பிரிக்கிறோம்.
இனி முக்கியமான பகுதிக்கு வருவோம்.
லக்ஷ்மீ அஷ்டோத்தர சத நாம ஸ்தோத்ரத்தின் மூன்றாவது ச்லோகம் :
அதிதிம் ச திதிம் தீப்தாம் வசுதாம் வசுதாரிணீம்
நமாமி கமலாம் காந்தாம் காமாக்ஷீம் க்ரோதசம்பவாம்
இதனை ,
ஓம் அதித்யை நம:
ஓம் தித்யை நம:
ஓம் தீப்தாயை நம:
ஓம் வசுதாயை நம:
ஓம் வசுதாரிண்யை நம:
ஓம் கமலாயை நம:
ஓம் காந்தாயை நம:
ஓம் காமாக்ஷ்யை நம:
ஓம் க்ரோத ஸம்பவாயை நம:
என்றே 90% புத்தகங்கள் காட்டுகிறது.
கமலா – தாமரையில் வீற்றிருக்கும் மஹாலக்ஷ்மீ
காந்தா -(விஷ்ணுவின்) மனைவி
காமாக்ஷி – அழகிய கண்களை உடையவள்
இது வரை சரி; அடுத்த நாமா ?
க்ரோத ஸம்பவாயை – கோபத்தோடு உதித்தவள் அல்லது கோபத்தினால் உதித்தவள்.
இது சரியாக பொருந்தவில்லையே…
இப்படி அர்ச்சனை செய்வது சரியாகுமா? லக்ஷ்மிக்கே பிடிக்குமா?
1935ல் வெளிவந்த புத்தகங்களில் நாமா சரியாகவே பிரிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் வந்தவர்கள், யாரோ ஒருவர் அறியாமல் பதம் பிரித்து ”க்ரோத ஸம்பவா” என அச்சிடப்போக, பின்னாளில் வந்தவர்கள் யாருமே அதை சரிபார்க்காமல் அப்படியே அச்சிடுகிறார்கள். இன்று கிட்டத்தட்ட எல்லா புத்த்கங்களிலும் இணையத்திலும் அப்படியே தான் இருக்கிறது.
லக்ஷ்மீ அஷ்டோத்தரம் கொண்டு அர்ச்சனை செய்பவர்க்கு லக்ஷ்மீ கடாக்ஷம் உண்டாகும், ஐச்வர்யம் பெருகும். ஆனால் மக்கள் பலரும் தாங்கள் கஷ்டப்படுவதாக புலம்புவதைப் பார்க்கும் போது – இது போன்று தவறுகள் இருப்பதைக் காண முடிகிறது.
நம்மை யாராவது “சிடுமூஞ்சி” என்றால் நாம் சந்தோஷப்படுவோமா? ஆனால் மஹாலக்ஷ்மியை இப்படி தவறாக அழைத்தால் பூர்ணமாக அனுக்ரஹம் எப்படி கிட்டும் ?
இனி சரியான பாடத்துக்கு வருவோம்
ஓம் கமலாயை நம:
ஓம் காந்தாயை நம:
ஓம் காமாயை நம:
ஓம் க்ஷீரோத ஸம்பவாயை நம:
க்ஷீரோத ஸம்பவாயை – பாற்கடலில் உதித்தவளே
இது அம்ருத மதன காலத்தில் பாற்கடலில் இருந்து மஹாலக்ஷ்மி உதித்தாள் எனும் புராணத்துக்கு இசைந்து அமைகிறது.
வாசகர்கள் அனைவரும் இனி மேல் நாமாக்களை திருத்திக் கொண்டு மஹாலக்ஷ்மியின் பூர்ண கடாக்ஷத்துக்கு பாத்திரமாகுங்கள்
EXCELLENT CLARIFICATION ; ONLY VERY FEW CAN DO THIS TYPE CORRECTION : MANY MANY PRANAMS
LikeLike